×

குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை ஆசைக்கு இணங்காததால் கணவரிடம் இருந்து பிரித்துவிட்டார் ம.பி சாமியார்: கோவை கமிஷனரிடம் பெண் புகார்

கோவை: குழந்தை பாக்கியம் கேட்டு சென்றபோது,ஆசைக்கு இணங்காததால் தன்னை கணவரிடம் இருந்து சாமியார் பிரித்து விட்டதாக கோவை கமிஷனரிடம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்து உள்ளார். கோவையை சேர்ந்த 36 வயது பெண், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு 2016-ல் திருமணம் நடந்தது. நாங்கள் ஐதராபாத்தில் வசித்தோம். 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. இதனால், கோயில், கோயிலாக சென்று வந்தோம். அப்போது, மத்திய பிரதேசத்தில் ஆசிரமம் நடத்தி வரும் ஒரு சாமியார் பற்றி அறிந்து கணவர் அவரை சந்தித்து குழந்தை இல்லாத விவரத்தை கூறினார்.

அந்த சாமியார் சொன்னபடி எனது கணவர் வீட்டில் இரவு நேரங்களில் பூஜைகளை நடத்தினார்.ஆக்ரோஷமாக இருந்த அந்த பூஜைகளை, பார்த்து நான் அச்சம் கொண்டேன். இந்நிலையில், சாமியார் பெங்களூர் வந்திருப்பதாக அறிந்து எனது கணவர் அங்கு அழைத்து சென்றார். தனி அறைக்கு வரச்சொன்ன சாமியார், அவருடைய ஆசைக்கு இணங்குமாறும், அப்போது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். நான் மறுப்பு தெரிவித்து வெளியே வந்து விட்டேன். இதுபற்றி கணவரிடம் தெரிவித்தேன். அவரோ எந்த கோபமும் கொள்ளாமல் சாமியார் சொல்படி நடந்து கொள் என தெரிவித்தார்.

எனது கணவரின் தோழி ஒருவரும் செல்போனில் பேசி சாமியார் சொல்வதை கேட்கும்படி கூறினார். ஆனால், நான் கேட்கவில்லை. அதன்பிறகு பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். சில மாதங்கள் கழித்து ஐதராபாத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றேன். கணவர் என்னை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். சாமியார் உன்னுடன் வாழக் கூடாது என கூறியிருக்கிறார் என்றார். அந்த சமயம் சாமியார் என்னை தொடர்பு கொண்டு ‘எனது ஆசைக்கு இணங்கினால் தான் உன் கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்வேன்’ என்று மிரட்டினார்.

அவரது ஆசைக்கு இணங்காததால் அந்த சாமியார் எனது வாழ்க்கையை அழித்து விட்டார். எனவே அந்த சாமியார், எனது கணவர், அவரது தோழி ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இதையடுத்து ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் கிழக்கு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள விவரம் தெரியவந்தது. பெண் கொடுத்த புகார் உண்மையா என விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

The post குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை ஆசைக்கு இணங்காததால் கணவரிடம் இருந்து பிரித்துவிட்டார் ம.பி சாமியார்: கோவை கமிஷனரிடம் பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : Samiyar ,Pooja ,Coimbatore ,
× RELATED வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்