×

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோயில் உள்ளது. பிரம்ம தீர்த்த குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு சிவன், பார்வதி நேரில் காட்சியளித்து ஞானப்பால் கொடுத்த புகழ்பெற்ற ஸ்தலமாகும். இந்த கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயில் உட்புறத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று மதியம் குழி தோண்டப்பட்டது.

அப்போது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 2 அடி முதல் அரை அடி வரை உள்ள 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுதவிர திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற 462 தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டது. அதை தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி நேரில் பார்வையிட்டார்.

தகவலறிந்ததும் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சட்டைநாதர் கோயில் சிலையா அல்லது வேறு கோயிலில் இருந்து சிலைகள் கொண்டு வந்து இங்கு புதைக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தனர். இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் எனவும், 13ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிலைகள் எனவும், செப்பேடுகள் இதுவரை எங்கும் கிடைக்காத நிலையில் முதல் முறையாக கிடைத்துள்ளதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த சிலைகளை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டார். இதைதொடர்ந்து டிஆர்ஓ முருகதாஸ் தலைமையில் ஆர்டிஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், இந்து அறநிலையத்துறை தனி தாசில்தார் விஜயராகவன் முன்னிலையில் கோயிலில் உள்ள ஒரு அறையில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post சீர்காழி சட்டைநாதர் கோயிலில் 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.

Tags : Sirkazhi Chattainath Temple ,Sirkazhi ,Mayiladuthurai district ,Chattainath ,Dharmapura Atheenath ,Shiva ,Tirunanasambandar ,Brahma ,Theertha ,
× RELATED அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்ற...