×

ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் கொடிகட்டி பறக்கும் உட்கட்சிப் பூசல்: புதிய மாவட்ட தலைவரை கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சி.. 2பேர் கைது..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை பயங்கர ஆயுதங்களால் தாக்க வந்த சென்னை கூலிப்படையை சேர்ந்த இருவர் பிடிபட்டுள்ளனர். உட்கட்சி பூசல் காரணமாக சொந்த கட்சிக்காரரை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற வழக்கில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசனின் வீடு அமைந்துள்ள கேணிக்கரை பகுதியில் மர்ம நபர்கள் இருவர் ஆயுதங்களுடன் அவரது வீட்டை இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்ததாக பரவிய தகவலை அடுத்து அப்பகுதியினர் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இருவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட இருவரும் சென்னை எண்ணூர் கூலிப்படையை சேர்ந்த சுரேஷ் மற்றும் மோகன் என்பது தெரியவந்தது. பயங்கர ஆயுதங்களை கொண்டு புதிய மாவட்ட தலைவர் தரணி முருகேசனை கொலை செய்ய வந்ததாக அவரது ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர். கூலிப்படையை வரவழைத்த பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் அவரது ஆதரவாளரான வழக்கறிஞரையும் கைது செய்ய கோரி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சில தினங்களுக்கு முன்பு நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவர் தரணி முருகேசனை முன்னாள் மாவட்ட தலைவரின் ஆதரவாளர் ஒருவர் தாக்க முயன்றதும், விளம்பர பதாகைகள் கிழிக்கப்பட்டதும் சர்ச்சையானது. இந்த நிலையில் பாஜக மாவட்ட செயலாளர் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூலிப்படையின் உதவியை நாடும் அளவிற்கு ராமநாதபுரம் பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post ராமநாதபுரம் மாவட்ட பாஜகவில் கொடிகட்டி பறக்கும் உட்கட்சிப் பூசல்: புதிய மாவட்ட தலைவரை கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சி.. 2பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,BJP ,Ramanathapuram ,district ,president ,Internal Party ,Internal ,Party ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...