×

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக விசாரிக்க ஐகோர்ட் குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா விளக்கம் தர உத்தரவிடப்பட்டது. சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரிபத்மன் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழுவை கல்லூரி நிர்வாகம் அமைத்தது. இதன் பின்னணியில் குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெற கூடாது எனவும் குழுவில் மாணவிகளுடைய பிரதிநிதிகள், பெற்றோர்களின் பிரதிநிதிகள் இடம்பெறாத வகையில் மாற்றியமைக்க கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் ஏழுபேர் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் தங்களின் அடையாளத்தை வெளியிடாமல் இந்த வழக்கை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் கோரிக்கை வைத்தனர். தங்களின் விவரங்களை மூடி முத்தரையிட்ட உறையில் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கல்லூரியில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தித்தர கலாஷேத்ரா அறக்கட்டளை தவறி விட்டதாகவும், பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை தடுப்பு கொள்கைக்கு வகுக்கும் சட்டப்பூர்வ கடமையிலிருந்து கலாஷேத்ரா தவறிவிட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குற்றசாட்டை குறித்து புகார் அளித்துள்ள நிலையில் தானாக முன்வந்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது சட்ட விரோதமானது எனவும், மாணவிகளுடைய பூகார் மீது விசாரணை நடத்த அக்கறை காட்டாதது பாரபட்சமானது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கை எடுக்க கூடாது என கலாஷேத்ராவில் தடை விதிக்க வேண்டும். மேலும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணை குழுவில் மாணவிகள், பெற்றோர்களின் பிரதிநிதிகளை சேர்த்து மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கிறது.

பாலியல் தொல்லை அளித்தவர்கள் வளாகத்திற்குள் நுழையவும் அதே போல மாணவிகளிடம் கலந்துரையாடல் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு மகளிர் ஆணையம் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் பணியிடங்களிலே பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்பு சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் கலாஷேத்ரா பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கு ஒரு கொள்கையை வகுக்க உத்தர விட வேண்டும் என்று நிறைய கோரிக்கைகள் அடிப்படையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மனுதான் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை வெறும் கண்துடைப்பாகவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை குழு மாற்றியமைக்கபடவில்லை என்று குற்றம் சாட்டினார். கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ஆஜரான சுந்தரேசன் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது எனவும் உத்தரவாதம் அளித்தார்.

மேலும் உயர்நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்தால் அதையும் அமுல் படுத்த தயார் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் பாலியல் தொல்லை அளித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் சிலர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், நிர்வாகத்தில் தலையிடவோ, வளாகத்தில் நுழையவோ, அனுமதிக்க வில்லை எனவும் உறுதியளித்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், குற்ற வழக்கு பதிக்கபட்டு விசாரணை நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி கலாஷேத்ரா நடவடிக்கையிலே மாணவிகள் திருப்தியடையவில்லை எனவும் நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற விசாரணை குழுவை உயர்நீதிமன்றம் ஏன் நியமிக்க கூடாது எனவும் விளக்கமளிக்கும்படி கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த கூடாது எனவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சாட்சிகளாக உள்ள மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் தடையிட்டு உத்தரவிட்டிருக்கிறார். அதே போல பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மாணவிகளுடன் தொடர்பு கொள்ள கூடாது எனவும் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மாநில மகளிர் ஆணைய அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதி இந்த மனுக்களுக்கு பதில் அளிக்கும் படி கலாஷேத்ரா அறக்கட்டளை ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : KALASHETRA ,Chennai ,Kalashethra ,iCort Committee ,ICORD ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...