×

காங்கிரசில் இணைந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் : பாஜவுடன் இருந்த 40 ஆண்டுகால உறவை முறித்து கொண்டார்!!

பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார். கர்நாடக பாஜ மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமானவர் ஜெகதீஷ் ஷெட்டார். இவர் ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் 6 முறை போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7வது முறையாக விண்ணப்பித்தார். ஆனால் பாஜ தலைமை வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்தது. பாஜ வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. தேர்தல் அரசியலில் இருந்து விலகும்படி பாஜ தலைமை வலியுறுத்தியது. அதை ஏற்க மறுத்து விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று தேசிய பாஜ தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து, தனது நிலையை உறுதி செய்தார். வரும் தேர்தலில் சீட் வழங்கவில்லை என்றாலும் போட்டுயிடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஷெட்டாரை முதல்வர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அமைச்சர் பிரகலத்ஜோஷி ஆகியோர் நேரில் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த ஜெகதீஷ் ஷெட்டர், நேற்று காலை 10.30 மணிக்கு வட கனரா மாவட்டம், சிர்சியில் உள்ள சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி வீட்டிற்கு நேரில் சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதை பெற்ற சபாநாயகர், சட்டப்படி முடிவு செய்வதாக தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பாஜவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகி கொள்ளதாக கர்நாடக மாநில பாஜ தலைவர் நளின்குமார்கட்டீலுக்கு கடிதம் அனுப்பினார். இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜவுடன் இருந்த உறவை முறித்து கொண்டார். இதைத் தொடர்ந்து , பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இணைந்தார். பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்ற ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மாநில தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, சித்தராமையா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கொண்டார். ஜெகதீஷ் ஷெட்டாரிடம் காங்கிரஸ் சின்னம் அடங்கிய கட்சி துண்டு, கொடி மற்றும் பூங்கொத்துவை மல்லிகார்ஜுனா வழங்கினார்.

The post காங்கிரசில் இணைந்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் : பாஜவுடன் இருந்த 40 ஆண்டுகால உறவை முறித்து கொண்டார்!! appeared first on Dinakaran.

Tags : Former ,Karnataka ,Chief Minister ,Jekadesh Shetter ,Congress ,Baja ,Bengaluru ,Jagadesh Shetter ,Karnataka Baja ,State ,Jekadish Shetter ,Dinakaran ,
× RELATED ‘அவதார புருஷன்’என மோடி உளறி வருகிறார்: மாஜி முதல்வர் தாக்கு