மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சி திருக்குளத்தெரு, வேதாசலம் நகரில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேற்கண்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்து. மேலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறிவிட்டது. மேலும், சாலைகளில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு பாதாள குழியைப்போல் உள்ளது. அந்தச்சாலை, வழியாக செல்லும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, மேற்கண்ட இடங்களில் சாலை அமைக்க தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு திட்டம் மூலம் ரூ.1.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மார்ச் 9ம் தேதி பூமி பூஜை போட்டு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், வேதாசலம் நகர் 3வது குறுக்குத் தெருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழைய சிமென்ட் சாலை பொக்லைன் இயந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கும்போது, அங்குள்ள குடிநீர் பைப் மற்றும் கழிவு நீர் பைப் லைன் உடைந்தன. அந்த, பைப்லைனை சீரமைக்காமல் அப்படியே விட்டுச் சென்று விட்டனர்.
இதனால், 2 நாட்களாக குடிநீர் மற்றும் கழிநீர் வெளியேறி இரண்டும் கலந்து தெருவில் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும், தேங்கிநிற்கும் கழிவுநீரால் அங்கு கடும் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த குடிநீர், கழிவு நீர் பைப் லைனை சீரமைத்து தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பேரூராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மாமல்லபுரம் சாலை அமைக்கும் பணியின்போது குடிநீர், கழிவுநீர் பைப் சேதம்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.