×

நிருபர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தபோது உ.பி.யில் பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக்கொலை: 3 பேர் அதிரடி கைது: 144 தடை உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் ஆதிக் அகமது. முன்னாள் எம்பி. பிரபல தாதாவான இவர் மீது கொலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன். இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான ராஜூபால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஆதிக் அகமது, அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது. இந்த சூழலில் ஆசாத், குலாம் ஆகியோர் கடந்த 13ம் தேதி போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இருவரையும் ஜான்சியில் மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது நடந்த சண்டையில் இச்சம்பவம் நடந்தது.

இந்நிலையில் உமேஷ் பால் கொலை வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை போலீசார் கைது செய்து அகமதாபாத்தில் உள்ள சிறையில் அடைத்தனர். அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக கைவிலங்கிட்டு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது இருவரும், போலீசாரின் முன்னிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த நிலையில் 3 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடலில் குண்டு பாய்ந்த நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே கீழே சுருண்டு விழுந்து உயரிழந்தனர். இதில் நிருபர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதிக் அகமது உள்ளிட்ட 2 பேர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அங்கிருந்த போலீசார், 3 பேரையும் சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தனர். விசாரணையில், துப்பாக்கியால் சுட்டவர்கள் நிருபர்கள் போர்வையில் காட்டி கொண்டு அவர்களுடன் ஊடுருவி இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது பணியில் இருந்த 17 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதியநாத், டிஜிபி ஆர்.கே.விஸ்வகர்மா மற்றும் சட்டம்- ஒழுங்கு சிறப்பு டி.ஜி., பிரசாந்த் குமார் ஆகியோருடம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, போலீஸ் அதிகாரிகள் உஷாராக இருக்க வேண்டும். மாநிலத்தில் அமைதி, சட்டம், ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பாதுகாக்க இருக்கவும், சம்பவம் குறித்த வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எச்சரித்து இருந்தார். அதே நேரத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரபிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல்வர் யோகி வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்ன செய்தனர் போலீசார்?
இந்த கொலை அம்மாநில போலீசார் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ஆதிக், அஷ்ரப் கொலை செய்யப்பட்டது எப்படி? துப்பாக்கி ஏந்திய போலீசார் கொலையாளிகளுக்கு எதிராக ஏன் தாக்குதல் நடத்தவில்லை? ஆதிக், அஷ்ரப்பை பல்வேறு தருணங்களில் நிருபர்கள் நெருங்க அனுமதித்தது ஏன்? என பல்வேறு கேள்வி போலீசார் முன்வைக்கப்படுகிறது. பலமுறை நிருபர்கள் நெருங்குவதை கவனித்த கொலையாளிகள், தாங்களும் நிருபர்களை போல மைக், கேமராவும் கையுமாக வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அப்படி சென்றால்தான் கொலை செய்யப்பட்ட சகோதரர்களை நெருங்க முடியும் என நன்றாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

ஆதிக், அஷ்ரப்பை கொலை செய்த பிறகு நொடி பொழுதில் கொலையாளிகள் 3 பேரும் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களது பெயர்கள் லாவ்லீன் திவாரி, அருண், சன்னி என தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் இருவரையும் கொலை செய்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என அவர்கள் 3 பேரும் முழக்கமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. ஆதிக் அகமது கொலை செய்யப்படும் காட்சியை யாரும் சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

The post நிருபர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தபோது உ.பி.யில் பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக்கொலை: 3 பேர் அதிரடி கைது: 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : U. GP ,Roudi Adhik Ahmad ,Lucknow ,Roudi Admik Ahmed ,Uttar Pradesh ,Roudi Adhik Ahmed ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ