×

தமிழ் வருடப்பிறப்பையொட்டி சுயம்புநாதர் கோயிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்

திருவிடைமருதூர், ஏப்.16: திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகே நரசிங்கன்பேட்டை சுயம்புநாதர் கோயிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பு நாளில் திருக்கல்யாண வைபவம் தொன்றுதொட்டு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் சோபக்கிருது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 10 மணி அளவில் சுவாமி சன்னதியில் ருத்ர ஹோமம் நடந்தது.

பின்னர் சுவாமி, லோகநாயகி அம்பாள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. மாலை 6 மணி அளவில் அங்காளம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் 30 வகையான சீர்வரிசை பொருட்களை மேளதாளம் முழங்க வான வேடிக்கை, வெள்ளை குதிரைகள் நடனத்துடன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோயில் தெற்கு பிரகாரத்தில் பிரத்தியேக அலங்கார மேடை அமைக்கப்பட்டு உற்சவர் சுயம்பு நாதர் மற்றும் லோகநாயகி அம்பாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மாலை மாற்றும் வைபவம், பொன்னூஞ்சல் அமைக்கப்பட்டு நலுங்கு வைபவங்கள் ஐதீக முறைப்படி நடந்தது. இதையடுத்து மேடையில் திருக்கல்யாணம் ஹோமம் செய்யப்பட்டு அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்தனர். இதில் திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை தம்பிரான் வேலப்பன் சுவாமிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு விருந்து உபசரிப்பு நடந்தது.  சுயம்பு நாதர் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post தமிழ் வருடப்பிறப்பையொட்டி சுயம்புநாதர் கோயிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thirukalyanam temple ,Tiruvidaimaruthur ,Narasinganpet ,Auduthurai ,Thiruvidaimaruthur ,Thirukalyanam ,Swayambunathur temple ,
× RELATED திருமுறை முற்றோதல் வழிபாடு