×

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிவன்மலையில் பஞ்சாங்கம் வாசித்து சிறப்பு பூஜை

காங்கயம், ஏப்.16:திருப்பூர் மாவட்டத்தில் பிரசத்தி பெற்றது சிவன்மலை சுப்ரமணியசுவாமி திருக்கோவில். இங்கு அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி போன்ற தினங்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். நேற்று தமிழ் புத்தாண்டு துவங்கியதையொட்டி சிவன்மலை முருகன் கோவில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டன. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பக்தர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த சோபகிருது ஆண்டில் பஞ்சங்கத்தில் குறிப்பிட்டுள்ள நன்மை, தீமைகள் வாசிக்கப்பட்டன. வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். 12 மணிக்கு உச்சி கால விஷேச பூஜை நடைபெற்றது.

சோபகிருது ஆண்டை பற்றி சிவன்மலை குருக்கள் கூறுகையில்,“சோபகிருது ஆண்டில் விவசாயம் செழிக்கும், சிறுதானியங்கள் உற்பத்தி பெருகும். காய்கறிகள் விலை குறையும். நேர்மையான முறையில் அரசு நடக்கும். மழைப்பொழிவு அதிகரிக்கும். சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதிக காற்று வீசும்’’ என்றார். தமிழ் புத்தாண்டில் சிவன்மலையில் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், காங்கயம் அடுத்துள்ள காடையூர் காடையீஸ்வரசாமி கோயில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், அகிலாண்டபுரம் அகஸ்த்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டீஸ்வரி கோயில், பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயில், நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

The post தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிவன்மலையில் பஞ்சாங்கம் வாசித்து சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Sivanmalai ,Tamil New Year ,Sivanmalai Subramaniaswamy ,Tirupur ,Amavasai ,Sashti ,Krittikai ,
× RELATED தமிழ்ப்புத்தாண்டில் சிவன்மலை முருகன்...