×

இணைவிப்பு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; கலசலிங்கம் பிஎட் கல்லூரிக்கு ரூ5 லட்சம் அபராதம் விதிப்பு: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: கலசலிங்கம் பி.எட் கல்லூரிக்கு ஐகோர்ட் கிளை ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கலசலிங்கம் பிஎட் கல்லூரி செயலர் தரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 2021-22ம் ஆண்டிற்கான இணைவிப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு: கல்லூரி மீதான பல்வேறு குறைபாடுகளால் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விளக்கம் கொடுத்த பிறகு இணைவிப்பு அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், மீண்டும் 2020ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

பின்னர் கல்லூரிக்கான அனுமதியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் 2021ல் திரும்ப பெற்றது. இதை எதிர்த்து மனு செய்யவில்லை. அனுமதியில்லாத நிலையில் 2021, ஏப்ரல் முதல் ஜூன் வரை பிஎட் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதன்பிறகு அனுமதியின்றி மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முன்மாதிரியான வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஆசிரியர் பணிக்குரியவர்களை அனுமதியின்றி சேர்த்துள்ளனர். 100 மாணவர்களை சேர்த்துள்ள நிலையில் மாணவர்கள் மீதான அனுதாபத்தை காட்டி அனுமதி பெற முயல்கின்றனர். ஒரு செமஸ்டரைக் கூட மாணவர்கள் எழுதவில்லை. கொரோனாவை காரணமாக கூறி அப்பீல் ஆணையத்தில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகவில்லை. மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துவிட்டு, அவர்களை வேறு எந்த கல்லூரிக்கும் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

அனுமதியில்லாத கல்லூரியில் படித்த மாணவர்களின் சான்றிதழ் தகுதியற்றது எனத் தெரிந்தும் 100 பேரை சேர்த்துள்ளனர். விதிகளை பின்பற்றாமல் மீறி செயல்பட்டுள்ள மனுதாரரை, இந்த நீதிமன்றம் பாதுகாக்க முடியாது. மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது மட்டுமே நோக்கமாக இருந்துள்ளது. மாணவர்கள் நலனை பார்க்காமல், தங்களின் சொந்த நலனுக்காக தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அனுமதியில்லாத கல்லூரியின் சான்றிதழ் வெறும் காகிதமாக மட்டுமே இருக்கும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த பணத்தை ஐகோர்ட் கிளை சட்டப்பணிகள் ஆணையத்திற்கு செலுத்த வேண்டும். விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய தலைவர் சம்பந்தப்பட்ட 100 மாணவர்களையும் அணுகி அவர்கள் செலுத் திய கட்டணத்தை பெற்றுத் தர உதவ வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக அந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம்.இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post இணைவிப்பு அனுமதி கோரிய மனு தள்ளுபடி; கலசலிங்கம் பிஎட் கல்லூரிக்கு ரூ5 லட்சம் அபராதம் விதிப்பு: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalasalingam PET College ,Madurai ,ICourt Branch ,Kalasalingam B.Ed College ,Virudhunagar district ,Thiruvilliputhur taluk ,Krishnankovil ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...