×

டாக்டரை தாக்கி கட்டி போட்டு 100 சவரன் ரூ.20 லட்சம் கொள்ளை: பழநியில் மர்ம கும்பல் அட்டகாசம்

பழநி: பழநியில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை ஆயுதங்களால் தாக்கி. கட்டி போட்டு சுமார் 100 சவரன், ரூ.20 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி டவுன், அண்ணா நகரை சேர்ந்தவர் உதயகுமார் (55). பழநி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக உள்ளார். இவரது மனைவி ரேவதி. மகள் ஸ்ரீநிதி. இவர் மதுரையில் தங்கி மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதி தனது மகளை பார்க்க மதுரை சென்று விட்டார். வீட்டில் உதயகுமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். நேற்று அதிகாலை 2 மணிக்கு பணி முடித்து விட்டு வந்த உதயகுமார் வீட்டை பூட்டி விட்டு படுத்துள்ளார்.

அதிகாலை 3.30 மணி அளவில் முகமூடி அணிந்திருந்த 3 நபர்கள் உதயகுமாரை எழுப்பி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சராமாரியாக தாக்கி, நாற்காலியில் அமர வைத்து கட்டி போட்டனர். பின்னர், வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து உள்ளே இருந்த சுமார் 100 சவரன், ரூ.20 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, உதயகுமாரை அவிழ்த்து விட்டு அக்கும்பல் தப்பியது. ரத்த காயங்களுடன் தட்டு தடுமாறி வீட்டை விட்டு வெளியே வந்த உதயகுமாரை பார்த்த அருகில் உள்ள ஜிம்மிற்கு வந்த இளைஞர்கள்அதிர்ச்சியடைந்து முதலுதவி செய்தனர்.

இதை பார்த்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தகவலறிந்து வந்த பழநி டவுன் போலீசார் விரைந்து வந்து உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post டாக்டரை தாக்கி கட்டி போட்டு 100 சவரன் ரூ.20 லட்சம் கொள்ளை: பழநியில் மர்ம கும்பல் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Sawarans ,Palani ,Savaran ,
× RELATED கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில்...