புதுடெல்லி: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை கடிதத்தை நேற்று கொடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அதிமுக தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் பத்து நாட்களில் முடிவை வெளியிட வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டுள்ளது. இதில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, அதேப்போன்று அதிமுகவின் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது ஆகியவைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் அதுசார்ந்த விவகாரத்தில் ஒரு இறுதியான அறிவிப்பு உத்தரவு வரும் வரையில் அதிமுக விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் வெளியிடக் கூடாது.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் ஐந்து புகார்கள் தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது. இவை அனைத்தையும் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இதேப்போன்று கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு அதாவது ஓ.பி.எஸ் தரப்புக்கு தான் ஒதுக்க வேண்டும். அவரது கையெழுத்து இல்லாமல் எடப்பாடி தரப்பினால் கர்நாடகா தேர்தலில் போட்டியிட முடியாது. எடப்பாடி பழனிசாமியை பொருத்தமட்டில் ஒரு சர்வாதிகாரியாக செயல்படுவது மட்டுமில்லாமல், அவர் ஒரு ஊழல் வாதி என்பது தான் உன்மையாகும். ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறும் அண்ணாமலை, முதலில் எடப்பாடி பழனிசாமியின் ஊழலை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post நீதிமன்ற விசாரணைகள் முடியும் வரையில் அதிமுக தொடர்பான அறிவிப்பு கூடாது: தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மனு appeared first on Dinakaran.