×

ராஜபாளையத்தில் ரயில் பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ரயில் பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய ரயில்வே மேம்பாலம் பணி தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பாலத்தின் இருபுறம் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சில இடங்களில் சாலை மிக குறுகலாக உள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் ரயில்பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ரயில்வே துறையினர் கூறுகையில், ‘‘சுரங்கப்பாதை அமைக்க தேவையான தளவாடப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர் அதற்கான இடங்களை எடுத்துக் கொடுத்து பணிகளை துவக்க வேண்டும்.

நெடுஞ்சாலை துறையினர்தான் தாமதப்படுத்துகின்றனர்’’ என்று தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிபட்டி ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரயில் பாதையை கடந்து சென்று தான் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கு செல்ல முடியும். தற்போது மின்சார ரயில்கள் இயக்க இருப்பதால் ரயில் நிலையத்திற்கும், மேம்பாலத்திற்கும் இடையில் உள்ள பகுதியை யாரும் கடந்து செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வாய்ப்புள்ளதால் அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக செல்ல முடியாது. எனவே சுரங்கப்பாதை பணிகளை விரைவில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கப்பாதை அமைத்தால் டூவீலர்கள், ஆட்டோக்கள் ரயில் பாதையை எளிதாக கடந்து சென்று விடும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்’’ என்று தெரிவித்தனர்.

The post ராஜபாளையத்தில் ரயில் பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...