×

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்

கிருஷ்ணகிரி, ஏப்.13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் வீடு வீடாக சென்று, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை துவக்கி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, கெலமங்கலம், தளி, ஓசூர், சூளகிரி ஆகிய 10 வட்டாரங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்கள், இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆலோசனையின்படி, கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் கணக்கெடுப்பு களப்பணி, ஏப்ரல் முதல் 2 வாரங்களிலும், மே மாத இறுதி வாரத்திலும் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர்கள் தமிழ்தென்றல், ராஜா, ராஜேந்திரன், அம்பிகா, திவ்யா, ரமணி, சிறப்பு பயிற்றுநர்கள் அருண்குமார், ஜித்தின், நித்யகலா, சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது: இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும், முறையாக பள்ளியில் சேர்த்து, பள்ளி கல்வியை முடிக்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய, சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவதற்காக குடியிருப்பு வாரியான பள்ளி செல்லாக் குழந்தைகள் அனைவரும், பள்ளிக்கு வெளியே உள்ளவர்கள் ஆவர். 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாமல் இடையில் நின்றவர்களை கண்டறிந்து, பள்ளிகள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்படுவார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும், எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல், வீடு வாரியாக இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.

குறிப்பாக இடம்பெயர்ந்த குடும்பத்தை சார்ந்த (6 முதல் 18 வயது வரை உள்ள) அனைத்து பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, நூற்பாலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் தொழில் நிமித்தமாக வருகிறார்கள். தொழிற்சாலை, சந்தைகளில் குழந்தைத் தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து இக்கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி, குடிசை பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில், பள்ளி செல்லா குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது. தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால், பொதுமக்கள் 1098 என்ற இலவச சேவை எண் அல்லது வட்டார வளமையத்திற்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinakaran ,
× RELATED வெளி மாநில மது விற்ற 42 பேர் மீது வழக்குபதிவு