×

37 ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டு மாயம்: தாம்பரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இணை ஆணையர் நேரில் விசாரணை

தாம்பரம், ஏப். 13: தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் 37 ஆர்.சி. புத்தக ஸ்மார்ட் கார்டு மாயமான விவகாரம் தொடர்பாக, மதுரை இணை ஆணையர் நேரில் விசாரணை நடத்தினார்.
மேற்கு தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் 80க்கும் மேற்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட புதிய நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யவும், 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் எப்.சி செய்வதற்காகவும் வருகின்றன. மேலும், ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறவும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாகன ஆர்.சி புத்தகங்கள் பெற்றுச்செல்லவும் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் 37 ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் திடீரென மாயமானது. தகவல் அறிந்த தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெய்சங்கர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் மற்றும் தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெய்சங்கர் ஆகியோர் காலை முதல் இரவு வரை தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

பிறகு அலட்சியமாக செயல்பட்டதாக கூறி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர், அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலாஜி, லட்சுமிகாந்த் காளத்தி, இளம் உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேரை பணி நீக்கம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் கடந்தாண்டு செப்டம்பர் 20ம் தேதி தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் அனைவருக்கும் நிபந்தனை அடிப்படையில் மீண்டும் பணி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டு மாயமான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மதுரை போக்குவரத்து இணை ஆணையர் பொன் செந்தில் நாதன், நேற்று நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணை நடந்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 37 ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டு மாயம்: தாம்பரம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இணை ஆணையர் நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tambaram RTO ,Tambaram ,R.C. ,Madurai ,RTO ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...