×

கல்பாக்கம் அருகே விபத்து: சுற்றுலா ஆட்டோ மீது கார் மோதி இங்கிலாந்து பயணிகள் 2 பேர் காயம்; ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சையால் நெகிழ்ச்சி

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே சுற்றுலா ஆட்டோ மீது கார் மோதியதில் இங்கிலாந்த நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். சிறப்பான சிகிச்சை அளித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 14 பேர், கடந்த 6ம் தேதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அனைவரும் கேரளா மாநிலத்தை சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து சில நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் 7 சுற்றுலா ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி புதுச்சேரி கடற்கரை, ஆரோவில் உள்ளிட்ட பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து சென்னைக்கு அனைவரும் புறப்பட்டனர். இவர்கள், கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியில் வந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற ஒரு கார் அங்கு வரிசையாக சென்ற ஒரு ஆட்டோவின் மீது மோதியது.

இதில் அந்த ஆட்ேடாவில் பயணம் செய்த ஜார்ஜ் பியர்ஷன் (25) என்பவரின் கால் எலும்பு முறிந்தது. மற்றொரு பயணி ஜியோ எரிட் (26) லேசான காயம் அடைந்தார். விபத்து பார்த்ததும் அந்த பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் கூவத்தூர் போலீசார் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர்.

அதில் ஜார்ஜ் பியர்ஷனை ஏற்றியபோது அவர் சுமார் 7 அடி உயரம் இருந்ததால் 6 அடி கொண்ட படுக்கையில் அவருக்கு சிகிச்சை அளிக்க சிரமப்பட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களது மடியில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர் படுகாயம் அடைந்தவர்களை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கல்பாக்கம் அருகே விபத்து: சுற்றுலா ஆட்டோ மீது கார் மோதி இங்கிலாந்து பயணிகள் 2 பேர் காயம்; ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிகிச்சையால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kalpakkam ,Thirukkalukkunram ,England ,Dinakaran ,
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே...