×

போரூர் அருகே, ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் 4 வாலிபர்கள் சரண்: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

பூந்தமல்லி: போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் கொளுத்துவான்சேரி பகுதியை சேர்ந்தவர் வினோத் (27). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த வாரம் அய்யப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பகுதியில் இவர் பைக்கில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து 2 பைக்குளில் வந்த மர்ம நபர்கள், இவரை வழிமறித்து ஓட ஓட விரட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக, காஞ்சிபுரம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் அஜித்குமார் (23), நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியைச் சேர்ந்த முருகன் மகன் நவீன்குமார் (25), சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசா நகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் யுவின்குமார் (28) மற்றும் சென்னை காந்தி நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (25) ஆகிய 4 பேரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்துள்ளனர்.

சரணடைந்த 4 பேரையும், நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 4 பேரும் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: நீதிமன்றத்தில் சரணடைந்த அந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விசாரணை முடிவில்தான், கொலைக்கான காரணம் தெரிய வரும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post போரூர் அருகே, ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் 4 வாலிபர்கள் சரண்: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi court ,Porur ,Poontamalli ,Vinod ,Ayyappanthangal Koluthuvanseri ,Thoothukudi ,Borur ,Dinakaran ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!