×

அடங்கல் சான்றிதழை இடைத்தரகர்களுக்கு கொடுத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலைய விற்பனை ரத்து: மானியங்கள் வழங்கப்படாது; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நவரைப் பருவத்தில் கே.எம்.எஸ் நெற்பயிர் 2022-23ல் 24,342 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 6 மெட்ரிக் டன் வீதம் 1,46,052 மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 59,000 மெட்ரிக் டன் நெல் வரவு எதிர்பார்க்கப்பட்டு முதற்கட்டமாக ஆர்.கே.பேட்டை, கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, பூண்டி, திருத்தணி, எல்லாபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 8 வட்டாரங்களில் 48 இடங்களில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் மற்றும் கிளை மேலாளர், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்புக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்கின்ற நெல்மணிகளை குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரக நெல் ரூ.2,160க்கும், பொது ரக நெல் ரூ.2,115க்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும். மேலும் கடந்த சொர்ணவாரி மற்றும் சம்பா பருவங்களில் பணியாற்றிய பட்டியல் எழுத்தர்களை நடப்பு பருவத்திலும் தொடர்ந்து அதே இடத்தில் பணியமர்த்தாமல் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக பணிமாற்றம் செய்து பணியமர்த்தப்பட வேண்டும் என மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளார். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் எழும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சம்மந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகள் தங்களுடைய அடங்கல் சான்றிதழை இடைத்தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகளிடம் வழங்கினால் அந்த விவசாயிக்கு இரண்டு வருடங்களுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய அனுமதி ரத்து செய்யப்படும். மேலும் அரசு வழங்கும் எந்தவொரு மானியத் திட்டங்களும் வழங்கப்பட மாட்டாது. தலையீடு செய்யும் இடைத் தரகர்கள் மற்றும் வெளி வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாய பெருமக்கள் அனைவரும் நேரடி நெல் கொள்முதல் நிலைய இ-டிபிசி வலைதளத்தில் பதிவுசெய்து தங்களுடைய நெல்மணிகளை எவ்வித சிரமமின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து, வெளிவியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோருக்கு இடமளிக்காமல் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post அடங்கல் சான்றிதழை இடைத்தரகர்களுக்கு கொடுத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலைய விற்பனை ரத்து: மானியங்கள் வழங்கப்படாது; மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur district ,KMS ,Navar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...