- ஒன்றிய அரசு கிட்ரியா விகார்
- Awadi
- கேந்திரிய விகார் குடியிருப்புகள்
- யூனியன் அரசு
- கேந்திரிய விகார்
- தின மலர்
ஆவடி: ஒன்றிய அரசின் கீழ் கட்டப்பட்டு வரும் கேந்திரிய விகார் அடுக்கு மாடி குடியிருப்பில், குழந்தை தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 1000க்கும் மேற்பட்ட ஒன்றிய அரசின் கேந்திரிய விகார் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி, கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். இதில், 800 குடியிருப்புகள் கொண்ட 3வது விரிவாக்க பணியில், சட்டத்திற்கு விரோதமாக வங்காளதேசத்தை சேர்ந்த ரபியுல் ஹக்கீ(15) என்ற சிறுவன் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பணியின்போது, சிறுவன் 8வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து, கட்டட மேற்பார்வையாளர் அளித்த புகாரின்படி, ஆவடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்தி விசாரணையில், ஆவடி சுற்றுவட்டார பகுதியில் பணியாற்றும் பல வடமாநில கட்டட தொழிலாளர்கள், வயது வரம்பின்றி கட்டட வேலைகளில் ஈடுபடுத்தப்படு
கின்றனர். அவர்களுக்கு, உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை என இந்த விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பாக, கட்டிடத்தின் மேற்பார்வையாளர்கள் ரூபெல் உசேன்(25), மணிகண்டன்(29), ஷாஜகான்(26) ஆகிய மூன்று பேரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் நேரில் சென்று நேற்று விசாரணை நடத்தினார்.
சென்னை அருகாமையில் உள்ள ஆவடியில் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் வடமாநிலத்து சிறுவர்களை பணி அமர்த்தி வருவதும் தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டட பணிகள் நடக்கும் அனைத்து கட்டுமான நிறுவனங்களையும் ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்கள் இருப்பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஒன்றிய அரசின் கேந்திரிய விகார் அடுக்கு மாடி குடியிருப்பில் மாடியிலிருந்து விழுந்து குழந்தை தொழிலாளி பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.