×

அதானியுடன் ஒப்பிட்டு போட்ட பதிவு விவகாரம்: எனது 3 கேள்விக்கு பதில் சொல்லுங்கள்..! ராகுலுக்கு ஜோதிராதித்ய சிந்தியா பதிவு

புதுடெல்லி: ஜோதிராதித்ய சிந்தியா குறித்து அதானியுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி போட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், அவர் ராகுலிடம் 3 கேள்விகளை கேட்டுள்ளார். காங்கிரசில் இருந்து வெளியேறி தற்போது ஒன்றிய பாஜக அமைச்சராக பதவி வகிக்கும் ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த சில நாட்களாக ராகுல் காந்தியை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட இவர், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிறகும் கொஞ்சம் காலம் எதுவும் பேசாமல் இருந்தார்.

ஆனால் தற்போது அதிகமாக ராகுலை ஜோதிராதித்ய சிந்தியா விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தியிடம் 3 கேள்விகளை கேட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நீங்கள் சமூக வலைதளங்களின் ட்ரோலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றீர்கள். என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை (அதானியுடன் ஒப்பிட்டு பதிவு) சுமத்தி, முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றீர்கள். எனது இந்த மூன்று கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் (மோடி சமூக விவகாரம்) குறித்து அவதூறாக பேசியதற்காக நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? ஆனால் நீங்கள் நான் சாவர்க்கர் இல்லை, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்கிறார்கள்! இது உங்களுடைய ஆணவ போக்கை காட்டுகிறது. சுயலாபத்திற்காக நீதிமன்றத்திற்கு ஏன் அழுத்தம் கொடுக்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும் சட்டவிதிகள் ஏன் வேறுபட வேண்டும்? உங்களை நீங்கள் இந்த நாட்டின் முதல் தர குடிமகனாக கருதுகிறீர்களா? நீங்கள் ஈகோவினால் மூழ்கியிருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Adani ,Jyotiraditya Scindia ,Rahul ,New Delhi ,Rahul Gandhi ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...