×

குடும்பத்துடன் சுற்றுலா வந்த கேரள வாலிபரால் பரபரப்பு கன்னியாகுமரி லாட்ஜ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி-படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை

கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த கேரள வாலிபர் நேற்று காலை லாட்ஜ் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இடுப்பு எலும்பு உடைந்து படுகாயமடைந்ததால் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் படர்நிலம் பகுதியை சேர்ந்தவர் ரதீஸ் (30). அங்குள்ள ஒரு பேட்டரி கடையில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது குடும்பத்தினர் உள்பட 47 பேருடன் பஸ்சில் சுற்றுலா புறப்பட்டார். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு நேற்றுமுன்தினம் மாலை கன்னியாகுமரிக்கு வந்தனர்.

பின்னர் ஒரு தனியார் லாட்ஜில் அனைவரும் அறைகள் எடுத்து தங்கினர். இதற்கிடையே நேற்று காலை சுமார் 7 மணியளவில் ரதீஸ் தனது அறையில் இருந்து எழுந்து 2வது மாடிக்கு சென்று இருக்கிறார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்வதாக சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தத்ைத கேட்டு லாட்ஜில் தங்கி இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே லாட்ஜில் தங்கியிருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதுகுறித்து உடனடியாக கன்னியாகுமரி போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர், ரதீசின் குடும்பத்தாருடன் சேர்ந்து அவரிடம் நைசாக பேசி கீழே இறங்கி வருமாறு கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் ரதீஸ் காதில் வாங்கி கொள்ளவில்லை. தொடர்ந்து குடும்பத்தார் கண்ணீர் விட்டு கதறியும், தீயணைப்பு துறையினர் முயற்சித்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்தநிலையில் காலை 9.30 மணியளவில் ரதீஸ் திடீரென 2 மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பு உடைந்தாக கூறப்படுகிறது. உடனே தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வாலிபரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். லேசான மனநலம் பாதிப்பு காரணமாக அவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சுமார் இரண்டரை மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post குடும்பத்துடன் சுற்றுலா வந்த கேரள வாலிபரால் பரபரப்பு கன்னியாகுமரி லாட்ஜ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி-படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari lodge ,Kanyakumari ,Kerala ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:...