×

ரயில்வே கேட் பழுதானதால் பாதிவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்-கடலூரில் பயணிகள் அவதி

கடலூர் : கடலூரில் ரயில்வே கேட் பழுதானதால் பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. முன்னதாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் உள்ளது. கடலூர் மார்க்கமாக ரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் கம்மியாம்பேட்டை ரயில்வே கேட் மூடப்படுவது வழக்கம். இது போன்ற நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும். இதற்கிடையே கம்மியாம்பேட்டை ரயில்வே கேட் அடிக்கடி பழுது ஆகுவதால் போக்குவரத்து பாதிப்பு இப்பகுதியில் தொடர் கதையாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் கடலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் கம்மியம்பேட்டையில் ரயில்வே கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டுள்ளார். ஆனால் திடீரென ரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் சரியான முறையில் ரயில்வே கேட் மூடவில்லை. இதன் காரணமாக தண்டவாளத்தில் சிக்னல் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட ரயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் வழியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ரயில்வே கேட் கீப்பர் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதன் பின்னர் மன்னார்குடி- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் அரை மணி நேர தாமதமாக புறப்பட்டு சென்றது. கடலூர் கம்மியாம்பேட்டையில் ரயில்வே கேட் பழுதானதால் அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ரயில்வே கேட் பழுதானதால் பாதிவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்-கடலூரில் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kadalur ,Cuddalore ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...