×

வாக்கு பெட்டிக்குள் கிடந்த பூத் சிலிப்..சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்ட தபால் வாக்கு பெட்டி..உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள்..!!

திருப்பத்தூர்: உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ஒரு சில வாக்கு எண்ணும் மையங்களில் அடிதடிகளும், காமெடிகளும் அரங்கேறிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. சுவாரசிய நிகழ்வுகள்: * திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்திரபுரம் ஊராட்சி 6வது வார்டில் வாக்கு சீட்டுக்கு பதிலாக பூத் சிலிப்பையும், வாக்காளர் அடையாளர் அட்டையையும் வாக்கு பெட்டிக்குள் போட்டு விட்டு சென்ற வாக்காளர்களின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குசீட்டை கையோடு எடுத்து சென்ற அந்த வாக்காளர்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. * ராமநாதபுரம் மாவட்டத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவியை அதிகாரிகள் தொலைவிட்டதால் சுத்தியல் கொண்டு வாக்குப்பெட்டி உடைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் போகலூர் 7வது வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 8 பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. போகலூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகள், பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை தபால் வாக்குகளை எண்ணுவதற்கு வாக்கு பெட்டியின் சீல், அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது. பெட்டியின் சாவி துளைந்ததால் சுத்தியல் மூலம் வாக்கு பெட்டியின் பூட்டை உடைத்த அதிகாரிகள் அதன் பின்பு பெட்டியை திறந்து வாக்குகளை எண்ண தொடங்கினர். * கரூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு வாக்கு எண்ணும் அறையில் போடப்பட்ட மேசையின் வரிசை எண் பட்டியல் மாற்றி வைக்கப்பட்டதால் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் இடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இரு கட்சியினரும் தங்களிடம் உள்ள பட்டியல்படி வாக்குகளை எண்ண வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டு, அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. …

The post வாக்கு பெட்டிக்குள் கிடந்த பூத் சிலிப்..சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்ட தபால் வாக்கு பெட்டி..உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள்..!! appeared first on Dinakaran.

Tags : Booth Chile ,Thirupattur ,Booth Silipp ,Dinakaran ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...