×

கார்கள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி; 6 பேர் படுகாயம்சென்னை, பெங்களூருவை சேர்ந்தவர்கள்கீழ்பென்னாத்தூரில் கோர விபத்து

கீழ்பென்னாத்தூர், ஏப்.11: கீழ்பென்னாத்தூரில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சென்னை, பெங்களூருவை சேர்ந்த பெண் உட்பட 2 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்தவர் கிஷோர்(32). இவர் தனியார் கம்பெனியில் மருந்து விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று சொந்த வேலையின் காரணமாக காரில் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை சென்னையை சேர்ந்த டிரைவர் மைக்கல்(36) என்பவர் ஓட்டி வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலை அருகே மதியம் 12.30 மணியளவில் கார் வந்தபோது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 கார்களும் நொறுங்கியது. இதில் கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் கார் டிரைவர் மைக்கல், எதிரே வந்த காரில் இருந்த பெங்களூரு சாந்தாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(58), மனைவி சந்திராம்பாள்(53), சொப்னா(31) மற்றும் சொப்னாவின் குழந்தைகள் கீர்த்தனா(7), அரிஷ்(3), அயிசின்(2) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கும், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிஷோரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திராம்பாள் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார்கள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி; 6 பேர் படுகாயம்
சென்னை, பெங்களூருவை சேர்ந்தவர்கள்
கீழ்பென்னாத்தூரில் கோர விபத்து
appeared first on Dinakaran.

Tags : Badugayamchennai, Bengaluru ,Kielpennathur ,Kilibennathur ,Chennai ,Bengaluru ,Patugayamchennai, Bengaluru ,Kheepennathur ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...