×

சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் புதிய காலனி பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக சுரங்கப்பாதை அமைக்கக்கோரி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் முதல் ஓச்சேரி வரை உள்ள பகுதியில் சுமார் 10 இடங்களில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால், குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் புதிய காலனி பகுதியில் சாலையின் இடதுபுறம் சுமார் 100 குடும்பங்களும், வலது புறம் சுமார் 100 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், பள்ளி, கல்லூரிகள், வேலைக்குச் செல்ல சாலையை கடப்பதற்கான யு வளைவு அதிகமான தொலைவில் உள்ளதால், சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தாமல் புதிய காலனி பகுதியில் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் பொதுமக்களை சாலையோரம் நிறுத்தி கயிறுகட்டி அரண் அமைத்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Thamal New Colony ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...