சென்னை: ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றார். ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணி இடமாற்றம் செய்து கடந்த மார்ச் 23ம் தேதி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பட்டு தேவானந்த் நேற்று பதவியேற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. இன்னும் 14 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில், புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம், சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் பிறந்த நீதிபதி பட்டு தேவானந்த் உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் கண்ணியம் உண்டு என்று தீர்ப்பளித்துள்ளார் என்று பாராட்டி பேசினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த குறுகிய காலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், குறிப்பாக ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்து வைத்துள்ளார் என்று பாராட்டினார்.
The post சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ஆந்திராவை சேர்ந்த பட்டு தேவானந்த் பதவியேற்பு: நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்வு appeared first on Dinakaran.