நெல்லை: அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வருகிறார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, சார் ஆட்சியர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் உள்ளிட்ட மற்ற காவல் நிலையங்களிலும் இதுபோன்ற புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட நெல்லை ஆட்சியர் பரிந்துரைத்திருந்தார். இதனை ஏற்று, ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. அதில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். முன் ஆஜராகி புகார், வாக்குமூலம் அளிக்கலாம். மீண்டும் புகார், வாக்குமூலம் அல்லது கூடுதல் தகவல் அளிக்க விரும்பினால் நேரில் வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருந்தால், அவர்களும் நேரில் சந்தித்து புகார் தரலாம். நேரில் புகார் அளிக்க இயலாதோர் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தரலாம், அல்லது 82488 87233 என்ற எண்ணிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு அதிகாரி அமுதா விசாரணை..!! appeared first on Dinakaran.