×

மஞ்சூர் நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் அவதி

மஞ்சூர், ஏப்.10: மஞ்சூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவின் தலைநகரான மஞ்சூரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளது. மஞ்சூரில் தாலுகா அலுவலகம், அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள், மகளிர் பள்ளி, கூட்டுறவு, தனியார் தேயிலை தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் மஞ்சூர் நகருக்கே சென்று வரவேண்டியுள்ளது.

இதையொட்டி ஊட்டி, குன்னூர், கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மஞ்சூர் வழியாக கிராமங்களுக்கு ஏராளமான அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர மஞ்சூரை சுற்றிலும் அப்பர்பவானி, அவலாஞ்சி, கிண்ணக்கொரை, குந்தா, எமரால்டு, அன்னமலை, பென்ஸ்டாக், மஞ்சகம்பை உள்பட ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளதால் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மஞ்சூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தினசரி வாகனப்போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மஞ்சூர் பகுதியில் இடப் பற்றாகுறையால் திண்டாட்டம் ஏற்படுகிறது.

குறிப்பாக கீழ்பஜார் பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி, மேல்பஜார் வரையிலும் மற்றும் கீழ்குந்தா சாலையில் பழைய சினிமா தியேட்டர் வரை சாலை மிகவும் குறுகலாக அமைந்துள்ளது. இதனால் அரசு பஸ்கள் முதல் அனைத்து வாகனங்களும் நடுரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டியுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டத்திற்கேற்ப இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

எனவே அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தை கருத்தில் கொண்டு மஞ்சூர் பஜார், கீழ்குந்தா சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

The post மஞ்சூர் நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் அவதி appeared first on Dinakaran.

Tags : Manjur ,Manchur ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...