×

புளியந்தோப்பை தொடர்ந்து 2வது சம்பவம்; ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து காய்கறி கடை ஊழியர் பலி: கொடுங்கையூரில் பரிதாபம்

பெரம்பூர்: ஷட்டர் வழியாக மின்சாரம் பாய்ந்து காய்கறி கடை ஊழியர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காந்திநகர் 3வது தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன் (50). இவர் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் சொந்தமாக காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரிடம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பம்தட்டை தாலுகா பகுதியை சேர்ந்த அழகர்சாமி (45) என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்றிரவு 10 மணி அளவில், வியாபாரத்தை முடித்துவிட்டு கடையின் ஷட்டரை இழுத்தபோது அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அழகர்சாமி மயக்கம் அடைந்தார். உரிமையாளர் ராஜ்மோகன் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அழகர்சாமி இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் சென்று விசாரணை நடத்துகின்றனர். கடையின் ஷட்டரில் எவ்வாறு மின்சாரம் கசிவு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த அழகர்சாமிக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். நேற்று, புளியந்தோப்பு பகுதியில் உள்ள மளிகை கடையின் ஷட்டரை திறக்கும்போது மின்சாரம் பாய்ந்து உரிமையாளர் கோபி (29) பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது காய்கறி கடை ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து கடை ஊழியர் பலியாகி உள்ளார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post புளியந்தோப்பை தொடர்ந்து 2வது சம்பவம்; ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து காய்கறி கடை ஊழியர் பலி: கொடுங்கையூரில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Pliyanthope ,Kodungayur ,Perampur ,Chennai ,Pleyanthope ,Pity ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு