×

ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் எடுக்கும் விழா: மஞ்சள் நீரால் மாநகரமே குளிர்ந்தது

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில், மஞ்சள் மாநகரமே மஞ்சள் நீரால் குளிர்ந்தது. ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறாவை சேர்ந்த சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. இதையடுத்து, 3 கோயில்களிலும் கடந்த மாதம் 25ம் தேதி இரவு கம்பங்கள் நடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகர் மற்றும் மாநகரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், விழா துவங்கியது முதல் தினமும் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து 3 கோயில்களிலும் உள்ள கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்தும், அக்னி சட்டி, பூங்கரகம் எடுத்து வந்தும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த 4ம் தேதி காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழாவும், 5ம் தேதி சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், விழாவின் இறுதி நிகழ்வான நேற்று ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கம்பம் அகற்றும் நிகழ்ச்சி நேற்று மதியம் 3 மணிக்கு துவங்கியது. பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கம்பங்கள் அகற்றப்பட்டதும், அந்தந்த கோயிலில் இருந்து பூசாரிகள் கம்பத்தை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் இரவில் காரைவாய்க்காலை அடைந்தது. பின்னர் மூன்று கோயில்களின் கம்பங்களும் வாய்க்காலில் விடப்பட்டது.

கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் பிடுங்கியதும், ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மஞ்சள் நீராட்டு நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து மக்களும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனால், மஞ்சள் மாநகரமே நேற்று மஞ்சள் நீரால் குளிர்ந்தது.

The post ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் எடுக்கும் விழா: மஞ்சள் நீரால் மாநகரமே குளிர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Erode ,Periyamariamman ,Mariamman ,Erode Periyamariamman ,Pole Taken Festival ,Dinakaran ,
× RELATED ஓமலூர் பெரியமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா