×

கல்பாக்கம் அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதல்; மாநகராட்சி அதிகாரி உட்பட 2 பேர் பலி: 4 பேர் படுகாயம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே சாலை தடுப்புச்சுவர் மீது கார் மோதியதில் மாநகராட்சி அதிகாரி உட்பட 2 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (33). சென்னை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மற்றும் இவரது நண்பர்களான சென்னை மாதவரத்தை சேர்ந்த புருஷோத்தமன் (34), நரேஷ் (30), கிஷோர் (29), நிர்மல் (31), கார்த்திக் (33) ஆகிய 6 பேரும் புதுச்சேரியை சுற்றி பார்ப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று நள்ளிரவு காரில் புறப்பட்டனர்.

காரை முருகானந்தம் ஓட்டினார். இன்று அதிகாலை கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், இசிஆர் சாலையோரமுள்ள தடுப்புச்சுவர் மீது வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த முருகானந்தம், புருஷோத்தமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நரேஷ், கிஷோர், நிர்மல், கார்த்திக் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 4 பேரை சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தில் 2 பலியான சம்பவம் கூவத்தூர் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

The post கல்பாக்கம் அருகே தடுப்பு சுவர் மீது கார் மோதல்; மாநகராட்சி அதிகாரி உட்பட 2 பேர் பலி: 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Barring Wall ,Kalpakkam ,Tirukkukulam ,Block Wall ,Kalbakkam ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...