×

சர்ச்சைக்குரிய வகையில் செயல்படும் ஆர்.என். ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு 12ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறார். குறிப்பாக, சனாதனத்துக்கும் வர்ணாசிரமதர்ம முறைகளுக்கும் ஆதரவாக அவர் பொதுமேடைகளில் எடுத்து வைத்த கருத்துக்கள் அபத்தமானவை.

அதேபோல, திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக தினந்தோறும் தனது பாய்ச்சலைத் தொடர்ந்தார். திருக்குறளுக்கு தவறான பொருள் சொல்லி, திருக்குறளே தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டார். மேலும், கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் இந்தியாவைப் பிளவுபடுத்துவதாகப் பிதற்றினார். பிரிட்டிஷ் ஆட்சி குறித்து அவர் வைத்த கோபமான விமர்சனங்களைப் பார்த்தபோது, ‘இந்திய நாடு இப்போதும் பிரிட்டிஷ் ஆளுகைக்குள் உள்ளதோ’ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது.

இதேபோல, அம்பேத்கரை பிளவுபடுத்தும் சக்தியாக ஆக்க காலனிய ஆட்சியாளர்கள் நினைத்தாகவும் இவர் தான் கண்டுபிடித்தார். இப்படி ஆளுநர் ரவி உதிர்த்த முத்துகள் அனைத்தும் சொத்தையான வாதங்கள். ஏதோ ஒரு கற்பனை உலகத்தைக் கட்டமைத்துக் கொண்டு அங்கு காற்றில் கம்பு சுத்திக் கொண்டு இருக்கிறார். இவை அனைத்தும் தமிழ்நாட்டில் சமூகச் சலசலப்பையும், தேவையற்ற பதற்றங்களையும், சர்ச்சைகளையும் விதைக்கும் கருத்துக்களாக மட்டுமே அமைந்திருக்கின்றன. இது அவரது பணிக்காக, பணிக்கப்பட்ட பணிகளும் அல்ல.

மேலும், மாநிலங்களில் மரபு சார்ந்த ஒரு அதிகாரப் பதவியில் இருப்பவர் ஆளுநர். அமைச்சரவையின் முடிவுகளைச் செயல்படுத்துபவர். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குபவர். ஒப்புதல் வழங்க மறுத்து, மீண்டும் அதனை சட்டமன்றத்திற்கு அனுப்ப அவருக்கு அதிகாரம் உண்டு. அதேபோல, சட்டமன்றம், மீண்டும் அந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். இவ்வாறு சட்டமன்றம் மற்றும் மாநில அமைச்சரவை விருப்ப அதிகார எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியவரே ஆளுநர் ஆவார். இதனை தான் அரசியலமைப்புச் சட்டமும் சொல்கிறது. உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் சொல்கின்றன. இம்முறைப்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவதும் இல்லை. மாறாக மீறியும் செயல்பட்டு வருகிறார்.

மாநில அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையே ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் வாசிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை அப்படியே வாசிக்காமல் பல பகுதிகளை நீக்கியும் சில பகுதிகளைச் சேர்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தையே அவமதிக்கும் செயலாக அமைந்திருந்தது அது. பொதுவெளியில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளுநர் தள்ளப்பட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கி நிறைவேற்றப்பட்ட 14 கோப்புகளுக்கு இன்னமும் அனுமதி தராமல் தாமதித்து வைத்துள்ளார் ஆளுநர்.

குறிப்பாக, 42 உயிர்களைப் பலிவாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் அவசரச் சட்டத்துக்கு இன்றளவும் அனுமதி தராமல் இருக்கிறார். ஆனால் ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்களை அவர் வெளிப்படையாகச் சந்தித்தது பொதுவெளியில் பரவி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. ‘ஏன் இது போன்ற கோப்புகளை முடக்கி வைத்துள்ளீர்கள்?’ என்று கேட்டபோது அரசுக்கு உரிய எழுத்து மூலம் பதிலைத் தராத ஆளுநர், மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். ‘கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப் பட்டதாகவே அர்த்தம்.

நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்’ என்று பேசி இருக்கிறார். ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவதூறு கருத்தைச் சொல்லி இருக்கிறார். கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆகிய போராட்டங்கள் அந்நிய நாடுகளின் நிதியால் நடந்த போராட்டம் என்று சொல்வது மக்களைக் கொச்சைப்படுத்துவதாகும். ‘ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து முதலில் போராட்டம் நடத்தியவன் நான்தான். உண்ணாவிரதம் நடத்தி தெருவில் கிடந்தேன். அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் டீல் பேசினார்கள்.

நான் தேர்தலில் நின்றபோது அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பணம் கொடுக்க வந்தார்கள்’ என்று பேட்டி கொடுத்தவர் பாஜவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். இது ஆளுநருக்கு தெரியுமா? அதேபோல, 13 உயிர்கள் துள்ளத் துடிக்க கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த மக்களும் அந்நியச் சதிகாரர்கள் என்கிறாரா ஆளுநர்? ஆன்லைன் சூதாட்டத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டாலும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும், அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று ஒரு ஆளுநர் நினைப்பாரே ஆனால் அத்தகைய ஆளுநர் எங்களுக்குத் தேவையில்லை.

ஆளுநர் பதவியே எந்த மாநிலத்துக்கும் அவசியமில்லாத பதவியாகும். தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் கொண்டு இரட்டையாட்சி நடத்துவதற்கு பாஜக நினைத்து அவர்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வரும் 12ம் தேதி மாலை 4 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • ஆளுநர் பதவியே எந்த மாநிலத்துக்கும் அவசியமில்லாத பதவி.
  • தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் கொண்டு இரட்டையாட்சி நடத்த நினைக்கிறது பாஜ.
  • அவர்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வருகிறார் ஆளுநர்.
  • ஆளுநரின் இந்த போக்கை கண்டித்து தான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.

The post சர்ச்சைக்குரிய வகையில் செயல்படும் ஆர்.என். ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு 12ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : R. N.N. ,Governor House ,Chennai ,Dizhagam Alliance ,Rawi ,Dizhagam ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...