![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_33076858/thumb.jpg)
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய ரியல் எஸ்டேட் (பெய்ரா) கூட்டமைப்பின் நிறுவனர் ஆ.ஹென்றி பேசினார். அவர் தனது உரையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019ல் உள்ள பல்வேறு சட்ட பிரிவு சிக்கல்களை களையவும், அதில் பல்வேறு மாற்றங்கள், சீர்திருத்தங்கள் கொண்டுவர வலியுறுத்தினார்.
மேலும், கட்டிட திட்ட அனுமதியில் குடியிருப்பு பகுதி, வணிக பகுதி ஆகியவற்றின் தளப்பரப்பளவு, பக்கவாட்டு திறவிடம், கட்டிடங்களின் உயரம், அலகுகளின் எண்ணிக்கை, முடிவு சான்றிதழ், திறவிடம், ஆகாயத்திறவிடம், உள்அமைவிடம், அதிகார பகிர்வுகள், இறுதி ஒப்புதல், கட்டணங்கள், உட்பிரிவு அனுமதிகள், கிராம நத்தம் மனைகளுக்கும் ஒரே சீரான அனுமதி, கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் புதிய விதிகளை அனுமதித்தல், நீர்நிலை அருகிலுள்ள நிலங்களுக்கு தடையின்மை சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், கருத்துக்களின்மீது வீட்டுவசதித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்து ஆலோசித்து, எதற்கெல்லாம் சாத்தியம் இருக்கிறதோ, அவற்றை பரிசீலித்து விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் வீட்டுவசதி துறை முதன்மை செயலாளர் அபூர்வா, நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன், மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தலைமை செயலகத்தில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் கருத்து கேட்பு கூட்டம்: பெய்ரா ஆ.ஹென்றி பங்கேற்பு appeared first on Dinakaran.