×

மூதாட்டியை வெட்டிய விவகாரம் மருமகள், கள்ளக்காதலன் கைது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த ஆலவாய் கிராமத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (65). இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இந்நிலையில், தனியாக வசித்து வருகின்ற நாகரத்தினம் நேற்று அதிகாலை தூங்கி எழுந்து வீட்டிலிருந்து வெளியே வரும்போது திடீரென அங்கு துணியால் முகத்தை மூடியபடி வந்த மர்ம நபர் ஒருவன் நாகரத்தினத்தை வீட்டினுள் இழுத்துச் சென்று தான் வைத்திருந்திருந்த கத்தியால் நாகரத்தினத்தின் தலையில் வெட்டி விட்டு தப்பினான். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நாகரத்தினம் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மூதாட்டியை வெட்டி விட்டு தப்பிய மர்ம நபர் யார்? எதற்காக வெட்டி விட்டு ஓடினார் என்றும் சீட்டு பிடிப்பதில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மூதாட்டி நாகரத்தினத்திற்கு கோபால் என்ற மகன் இருந்துள்ளார். அவருக்கும் ஜெயந்தி மாலா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தையுடன் அதே பகுதியில் தனிக்குடித்தனமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் இறந்துவிட்டார். அதன்பிறகு, ஜெயந்திமாலா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெயந்திமாலாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவருக்கும், கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் அதையறிந்த மூதாட்டி நாகரத்தினம் அடிக்கடி மருமகள் ஜெயந்திமாலாவை கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மருமகள் ஜெயந்திமாலாவும், கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோர் திட்டமிட்டு இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தி நடத்தியிருக்கலாம் என்ற போலீசாரின் முதல் கட்ட விசாரணையிலும் மற்றும் தாக்கப்பட்ட நாகரத்தினத்தின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் மருமகள் ஜெயந்திமாலா மற்றும் கள்ளக் காதலன் மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post மூதாட்டியை வெட்டிய விவகாரம் மருமகள், கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Nagaratnam ,Alavai village ,
× RELATED செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என...