×

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: ஒருவருக்கு 14 மாதம் சிறை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 11 மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. 2 படகுகளை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை, கடந்த மார்ச் 22ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 12 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை நேற்று இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணை செய்த நீதிபதி, மீனவர்கள் நைல் ராஜ், பாரதிதாசன், சசிகுமார், ரவி, சிவக்குமார், நாகப்பன், கலையரசன், லோகேஸ்வரன், சக்தி, ராஜாமணி, சுந்தரமூர்த்தி ஆகிய 11 பேரை, மீண்டும் கைதானால் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டார். மீனவர் விசாகலிங்கம் கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விடுதலையானவர். மீண்டும் அவர் கைது செய்யப்பட்டதால் இவருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 2 படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கிடவும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீனவர் விசாகலிங்கம் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். விடுதலையான 11 மீனவர்கள் சில நாட்களில் தமிழ்நாடு திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

The post இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: ஒருவருக்கு 14 மாதம் சிறை appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lankan Navy ,Rameswaram ,
× RELATED 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்