புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மகன் அனில் அந்தோணி நேற்று திடீரென பா.ஜவில் இணைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி. கேரளாவை சேர்ந்த இவர் அங்கு முதல்வராகவும், காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் அனில் அந்தோணி. கேரள காங்கிரஸ் கட்சியில் டிஜிட்டல் மீடியா பிரிவின் மாநில தலைவராக இருந்தார். குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படம் வெளியிட்ட போது காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தனர். ஆனால் இந்திய இறையாண்மையில் பிபிசி தலையிடுவதாக அனில் அந்தோணி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் நேற்று திடீரென ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், வி முரளீதரன் முன்னிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு சென்று அனில் அந்தோணி பா.ஜவில் இணைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, உறுப்பினர் அட்டையையும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார். பா.ஜவில் இணைந்தது பற்றி அனில் அந்தோணி கூறுகையில்,’ நான் பா.ஜவில் இணைந்தாலும், என் தந்தையின் மீதான மரியாதை அப்படியே இருக்கும்’ என்றார்.
The post காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மகன் பா.ஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.