×

இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டு விழா: அடுத்த மாதம் விமரிசையாக நடக்கிறது; 2 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பிதழ்

லண்டன்: இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு அடுத்த மாதம் முடிசூட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க உலகம் முழுவதும் உள்ள சுமார் 2 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட உள்ளன. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் கடந்தாண்டு உடல்நல குறைவால் காலமானார். இதையடுத்து புதிய மன்னராக 3ம் சார்லஸ் கடந்தாண்டு அரியணை ஏறினார். இருப்பினும் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், 3ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வரும் மே 6ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி 3ம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, 3ம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்தபடி சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதே தினத்தில் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார். அரசர் 3ம் சார்லஸின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசர் 3ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட், மற்றொரு இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கலே ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் உள்ள சுமார் 2 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட உள்ளன. முடிசூட்டு, பதவியேற்பு விழா மே 6ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் உள்ள அப்பே தேவாலயத்தில் விமரிசையாக நடைபெறும்.

The post இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டு விழா: அடுத்த மாதம் விமரிசையாக நடக்கிறது; 2 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் appeared first on Dinakaran.

Tags : Coronation ,King ,Charles of ,England ,LONDON ,King Charles ,Coronation Ceremony ,King Charles of England ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்