×

பாடகர் வீட்டில் நகைகள் மாயமான விவகாரம் நேபாளம், பீகார் முன்னாள் ஊழியர்களிடம் விசாரணை: துபாயில் உள்ள விஜய் ஏசுதாசை விசாரணைக்கு ஆஜராக 2வது சம்மன்

சென்னை: பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் மாயமான விவகாரத்தில், முன்னாள் ஊழியர்களான நேபாளம் மற்றும் பீகார் பகுதியை சேர்ந்த 2 பேரிடம் போலீசார் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், பாடகர் விஜய் ஏசுதாசுக்கு 2வது முறையாக ஆஜராக போலீசார் சம்மன் அளித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை 3வது தெருவை சேர்ந்தவர் விஜய் ஏசுதாஸ். சினிமா பாடகரான இவர், தனது மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி வீட்டில் உள்ள நகைகளை சரிபார்த்துள்ளார் அவரது மனைவி தர்ஷனா. அப்போது, லாக்கரில் இருந்து 60 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது.

இது குறித்து, கடந்த மாதம் 30ம் ேததி அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், எங்கள் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் சையது, பெருமாள் ஆகியோர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது’ என்று கூறியிருந்தார். அந்த புகாரின்படி குற்றப்பிரிவு போலீசார், விஜய் ஏசுதாஸ் வீட்டிற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். அப்போது அது ‘சீக்ரெட் எண்’ கொண்ட லாக்கர் என்பதும், அந்த ரகசிய எண் கணவன்-மனைவிக்கு மட்டுமே தெரியுமாம். இந்நிலையில் புகாரினபடி, பணியாளர்களான மேனகா, சையது, பெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

எனினும் நகைகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த தகவல் துபாயில் உள்ள பாடகர் விஜய் ஏசுதாசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விஜய் ஏசுதாஸ் வீட்டில் தற்போது மற்றும் முன்னாள் ஊழியர்கள் என 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், நேபாளா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் என இரண்டு பேர் தற்போது அவர்களின் சொந்த ஊர்களில் உள்ளனர். இதனால் இருவரிடம் போலீசார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு அவர்களும் சென்னைக்கு விசாரணைக்கு வருவதாக கூறியுள்ளனர். துபாயில் உள்ள விஜய் ஏசுதாசுக்கு தகவல் அளித்து, ஒரு வாரம் ஆகும் நிலையில் நேற்று வரை அவர் சென்னை திரும்பவில்லை. இதனால்,விஜய் ஏசுதாஸ் சென்னை திரும்ப போலீசார் மீண்டும் 2வது முறையாக அழுத்தம் கொடுத்துள்ளனர். எனவே, அவர் சென்னை திரும்பினால் தான் ரகசிய குறியீடு உள்ள லாக்கரில் இருந்து மாயமான நகைகள் குறித்து முழுமையான தகவல் வெளியே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post பாடகர் வீட்டில் நகைகள் மாயமான விவகாரம் நேபாளம், பீகார் முன்னாள் ஊழியர்களிடம் விசாரணை: துபாயில் உள்ள விஜய் ஏசுதாசை விசாரணைக்கு ஆஜராக 2வது சம்மன் appeared first on Dinakaran.

Tags : Singer ,Nepal, Bihar ,Samman ,Vijay Yesuddasai ,Dubai ,Chennai ,Vijay Esudas ,Nepal ,Bihar ,Vijay Esuddasai ,2nd Samman ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...