×

கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பந்தல் அமைத்திடுக: திமுக நிர்வாகிகளுக்கு தலைமை கழகம் சுற்றறிக்கை..!!

சென்னை: கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் வேண்டுகோளுக்கிணங்க, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைக்கால வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, ஏப்ரல் மாத துவக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்களை இக்கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனைச் சந்திப்புகளிலும், சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் “தண்ணீர்ப் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமெனவும்; மாவட்ட – மாநகர – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – வட்ட – கிளைக்கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் – அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோடை காலம் முழுவதும் இத்தண்ணீர் பந்தல் தொடர்ந்து செயல்பட, தங்களை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பந்தல் அமைத்திடுக: திமுக நிர்வாகிகளுக்கு தலைமை கழகம் சுற்றறிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Corporation ,Dizagam ,Chennai ,Dizhagam ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...