×

சென்னை, நீலகிரிக்கு 2 நாள் பயணமாக 8ம் தேதி வருகை; எடப்பாடி, அண்ணாமலை பிரச்னைக்கு மோடி பஞ்சாயத்து; 2 பேரும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டதால் பரபரப்பு

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வரும் 8, 9ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் முழு சுற்றுப்பயண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இன்று மாலை சென்னை விமானநிலையத்தில் எஸ்பிஜி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதேநேரத்தில் கூட்டணி பிரச்னை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியும், அண்ணாமலையும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பழைய விமானநிலையத்தில் வரும் 8ம் தேதி மதியம் 2.45 மணிக்கு, தெலங்கானா மாநிலத்தில் உள்ள பேகம்பட் விமானநிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் வந்திறங்குகிறார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மதியம் 2.55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்துக்கு வருகிறார். மாலை 3 மணியிலிருந்து 3.15 மணி வரை பார்வையிட்டு திறந்து வைக்கிறார். மாலை 3.20 மணிக்கு காரில் புறப்பட்டு, மாலை 3.25 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 3.30 மணியளவில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.50 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையார் சென்றடைகிறார்.

அங்கிருந்து மாலை 3.55 மணிக்கு காரில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலை 4 மணிக்கு செல்கிறார். அங்கு மாலை 4 முதல் 4.20 மணிவரை நடைபெறும் விழாவில் சென்னை-கோவை இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். 4.25 மணிக்கு காரில் புறப்பட்டு, 4.40 மணியளவில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்துக்கு வருகிறார். அங்கு மாலை 4.45 முதல் 5.45 மணிவரை நடைபெறும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார்.

அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 5.55 மணியளவில் சென்னை ஐஎன்எஸ் அடையார் வந்து சேரும் பிரதமர் அங்கிருந்து மாலை 6 மணியளவில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 6.20 மணியளவில் பழைய விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து காரில் பல்லாவரம், அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்துக்கு வருகிறார். அங்கு மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை நடைபெறும் விழாவில், பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, நிறைவு பெற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
அங்கிருந்து இரவு 7.40 மணியளவில் பழைய விமான நிலையத்துக்கு காரில் வருகிறார். இரவு 7.45 மணியளவில் இந்திய விமானப் படையின் தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு மைசூர் விமானநிலையம் சென்றடைகிறார். மறுநாள் (9ம் தேதி) காலை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி வருகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றபின் காலை 9.45 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.20 மணிக்கு, கர்நாடக மாநிலம் மைசூர் யுனிவர்சிட்டி ஹெலிபேட் தளத்தில் சென்று இறங்குகிறார் என பிரதமர் மோடியின் 2 நாள் பயண முழு விவரங்கள் குறித்து நேற்றிரவு சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட நேற்றிரவு புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமரின் சிறப்பு எஸ்பிஜி பிரிவின் ஐஜி தலைமையிலான குழுவினர் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இன்று காலை முதல் சென்னை நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் இடங்களை பார்வையிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் விவாதிக்கின்றனர்.

பின்னர் இன்று மாலை 4 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் உள்ள விருந்தினர் அறையில், பிரதமரின் பாதுகாப்பு எஸ்பிஜி ஐஜி தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு அதிகாரிகள், ஒன்றிய-மாநில உளவு பிரிவு அதிகாரிகள், விமானநிலைய உயர் அதிகாரிகள், சென்னை மற்றும் தாம்பரம் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்தநிலையில் சென்னை வரும் மோடியை சென்னை விமானநிலையத்தில் வரவேற்கவும், அவரை தனியாக சந்தித்துப் பேசவும், எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரம் கேட்டுள்ளனர். அதில் எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் கூட்டணி தொடர்பாக மோதல் எழுந்துள்ளது. இரு கட்சியினருக்கிடையே கீழ் மட்டத்தில் மோதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி பாஜக தலைமையில் இருக்க வேண்டும். அதிமுக வேண்டாம் என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால், அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று எடப்பாடி கூறி வருகிறார். இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் எழுந்துள்ளது.

இதனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோடியிடம் புகார் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதுவரை அவர்களுக்கு மோடி அலுவலகத்தில் இருந்து நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் வரவேற்க மட்டும் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நேரம் ஒதுக்கினால் இரு தரப்பினரும் புகார் செய்ய திட்டமிட்டுள்ளது கூட்டணியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை, நீலகிரிக்கு 2 நாள் பயணமாக 8ம் தேதி வருகை; எடப்பாடி, அண்ணாமலை பிரச்னைக்கு மோடி பஞ்சாயத்து; 2 பேரும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai, Nilgiri ,Modi ,Panchayat ,Edappadi ,Annamalai Prachna ,Narendra Modi ,Chennai ,Nilgiri ,Modi Panchayat ,Annamalai ,
× RELATED கிட்டாம்பாளையம் ஊராட்சி குளத்தில்...