×

ஏப்.5ல் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் பந்தல்கால் நடும் வைபவம்

கோவில்பட்டி, மார்ச் 28: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் வரும் ஏப்ரல் 5ம் தேதி பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதையொட்டி நேற்று பந்தல் கால் நடும் வைபவம் நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி பெருந்திருவிழா முக்கியமானது. இந்தாண்டு திருவிழா வரும் ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கோயிலில் பந்தல் கால் நடும் வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி, விளா பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் கோயில் முன்பு பங்குனி பெருந்திருவிழா பந்தல் கால் நடும் விழா நடந்தது. அதன்பிறகு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் கோயில் செயல்அலுவலர் வெள்ளைச்சாமி, கோயில் ஆய்வாளர் சிவகலைப்பிரியா, திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி மாரிசாமி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் ஏப்.5-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை, மாலை சுவாமி, அம்பாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 13-ம்தேதி தேரோட்டமும் நடக்கிறது. மறுநாள் 14ம் தேதி தீர்த்தவாரியும், 15-ம் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Koilpatti Chenbagavalli Ambal Temple ,
× RELATED ஏப்.5ல் பங்குனி பெருந்திருவிழா...