×

பண்ருட்டி அருகே பரபரப்பு ஏரிக்கரையில் எரிந்து கிடந்த மனித மண்டை ஓடு

பண்ருட்டி, மார்ச் 26:  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் நேற்று அதிகாலையில் மனித மண்டை ஓடு எரிந்த நிலையில் இருப்பதை கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் ஆய்வு நடத்தியபோது, கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் சங்கர் வீட்டின் முன் மனித மண்டை ஓடு கிடந்தது தெரியவந்தது. நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே எழுந்து வந்த சங்கர், தனது வீட்டின் முன் மண்டை ஓடு கிடப்பதை கண்டு, அதை எடுத்து அருகில் உள்ள ஏரிக்கரையில் கொண்டு வந்து தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது ஏரிக்கரை முழுவதும் சென்று பின்னர் திரும்பியது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மண்டை ஓட்டை காவல் நிலையம் எடுத்து வந்து ஆய்வு செய்தனர். அதில் மண்டை ஓடு, இறந்த ஒருவரின் மண்டை ஓடு என்பதும், நரபலி ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Samsonru lake ,Panruti ,
× RELATED ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிய பாமக