×

திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை

திருவண்ணாமலை, மார்ச் 24: திருவண்ணாமலையில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலும் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் பரவலான மழையும் நீடிக்கிறது. முன்கூட்டியே கோடை மழை தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த கனமழையால், நகரின் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, கடலைக்கடை சந்திப்பு மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. மேலும், அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அந்த வழியாக சென்றவர்கள் அவதிப்பட்டனர். அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை பரவலான கனமழை பெய்தது.

Tags : Tiruvannamalai ,
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...