×

வேலை கேட்பது போல நடித்து பல்லடம் அருகே வட மாநில வாலிபரை கடத்தி பணம் பறிப்பு

பல்லடம்: பெண்ணை வைத்து, வேலை கேட்பது போல நடித்து பல்லடம் அருகே வட மாநில வாலிபரை கடத்திய கும்பல் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேற்கு வங்கத்தை சேர்ந்த பஜூலு மண்டல் மகன் ஷாஜி மண்டல் (35). இவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் வசித்து கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநில பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்த பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம ஆசாமிகள் ஷாஜி மண்டலை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம் வெள்ளி பிரேஸ்லெட்டை பறித்து கொண்டு, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.  இதுகுறித்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் மனைவி சுக்லா சர்தாரை (35) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் 4 பேரும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Tags : North State ,Palladam ,
× RELATED ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி...