சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபர் அதிரடி கைது

சிதம்பரம், மார்ச் 22: சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சித்தலபாடி டாஸ்மாக் கடை அருகே  சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் ரவாண்டா நாட்டை சேர்ந்த கிகாலி கிமிஹுராரா பகுதியை சேர்ந்த கட்டோரா மகன் கட்டோரா ஏமி டி ஜிஹோவா(29) என தெரிய வந்தது. இவர் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இவர் தற்போது புதுச்சேரி ஆரோவில்லில் தங்கி இருந்து சிதம்பரம் பகுதியில் வந்து கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது இதையடுத்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த 80 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முன்னாள் மாணவர் என கூறப்படுகிறது. இவரது பாஸ்போர்ட் மற்றும் விசா நகலை வாங்கி விசாரணை செய்ததில், இவரிடம் இந்திய நாட்டில் வசிக்கும் உரிமம் இல்லை என தெரிய வந்தது, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு புதுச்சேரி, மே 22: கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை வேதனையுடன் தெரிவித்தார். ஜி20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளில் நேற்று கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடல்சார் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டறியவும், இதுதொடர்பாக ஜி20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் உணவுக்காக மாறி பின்பு நாமே மீன்களை உண்கிறோம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதார கேட்டினால் ஏற்படும் நோய்களை தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். கடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக நமது குடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. நிச்சயமாக இது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கவர்னர் உறுதிமொழி வாசிக்க, அதனை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து, தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் பேரணியை கவர்னர் தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். சபாநாயகர் செல்வம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.