நெல்லை, மார்ச் 21: நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 432 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து பரிசீலனை செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவர்களது இருக்கைக்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுகொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டிஆர்ஓ செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமாரதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.