×

முன்விரோதத்தில் தமிழ்பல்கலை. பேராசிரியரை கடத்தி சென்று தாக்கிய 2 பேர் கைது

வல்லம், மார்ச்19: தஞ்சாவூர் பாங்க் ஸ்டாப் காலனி, 7வது தெருவை சேர்ந்த உலகேசன் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன் (47). இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதிகள் துறையில் தமிழ் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி வளர்மதி.கடந்த 14ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற பாலசுப்பிரமணியன் அன்று மாலை வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் 15ம் தேதி மாலை காயங்களுடன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது யாரோ கடத்திச் சென்று வல்லம் பகுதியில் வைத்து தன்னை தாக்கியதாக தெரிவித்து விட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்துள்ளார்.தொடர்ந்து வளர்மதி தனது கணவரை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 17ம் தேதி கண்விழித்த பாலசுப்பிரமணியனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் வளர்மதி புகார் செய்தார். அதில் தனது கணவரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மகன் சந்தோஷ் (25) கடத்திச் சென்று தாக்கி உள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.புகாரின் பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்விரோதம் காரணமாக சந்தோஷ் தனது நண்பர் பார்த்தி (24) என்பவருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியனை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து சந்தோஷ் மற்றும் பார்த்தி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tamil University ,Munvirodham ,
× RELATED திண்டுக்கல் அருகே தமிழ்ப் பல்கலை...