ஏர்வாடி, மார்ச் 19: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 46 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் பெரும்பாலான ஏக்கர் நிலங்கள் எவ்வித பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு பல்லாயிரக்கணக்கான நிலங்கள் தனியார் சிலர் ஆக்கிரமிப்பில் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். அதன்பேரில் அறநிலையத்துறை, வருவாய்துறை இணைந்து கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயில் மற்றும் அதன் குழு கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி கடம்போடுவாழ்வு கைலாசநாதர் மற்றும் வெங்கடாசலபதி கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை நிலம் தனிப்பிரிவு தாசில்தார் இந்திராகாந்தி தலைமையில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் நில அளவீட்டாளர்கள் ரோவர் கருவி மூலம் நில அளவீடு செய்து எல்லை கற்கள் பதிக்கும் பணி மேற்கொண்டனர். இதுவரை 125 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து உள்ளனர். அதே நேரத்தில் 280 ஏக்கர் நிலம் மட்டும் அளவீடு செய்ய முடியாமல் உள்ளது. அங்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு தராததால் அளிக்காததால் அளவீடு செய்ய முடியாமல் உள்ளது என்று தாசில்தார் இந்திரா காந்தி கூறினார்.