கோவை, மார்ச் 18: கோவை அரசு மருத்துவமனை அருகே லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் தடுப்பு இரும்பு கம்பி உடைந்து விழுந்ததில் அரசு பஸ் கண்ணாடி சேதமடைந்தது. கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியில் லங்கா கார்னர் ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்க பாதையில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால், முன் கூட்டியே வாகனங்கள் நிறுத்த இரும்பு தடுப்பு சுரங்க பாதைக்கு முன்னதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல அவ்வழியாக சென்ற அரசு பேருந்து தடுப்பை கடந்து சென்றபோது, பேருந்தின் மேல் பகுதியில் வைத்திருந்த ஸ்டெப்னி டயர் இரும்பு தடுப்பு மீது மோதியது. இதனால், இரும்பு தடுப்பு உடைந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்பை அகற்றும் பணிகளை மேற்கொண்டு சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.