×

85 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன ரயில்வே மேம்பாலத்தில் ஏப்ரலில் சோதனை ஓட்டம்: ஆய்வுக்குபின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

ராஜபாளையம், மார்ச் 17: ராஜபாளையம் சத்திரப்பட்டி வெம்பக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பால திட்ட பணி 85% முடிவடைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜபாளையம் சத்திரப்பட்டி வெம்பக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பால திட்ட பணியையும், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்புச் சாலைத் திட்டப்பணியையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ‘‘மேம்பாலப்பணி கொரோனா தாக்கம் மற்றும் நில எடுப்பு பணி காரணமாக காலதாமதம் ஏற்பட்டாலும் தற்போது 85% பணி முடிவடைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேம்பால பணியை விரைந்து முடிக்க சட்டமன்ற உறுப்பினரை தினந்தோறும் மேம்பாலப் பணியை பார்வையிட்டு துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணியும் 95% முடிவடைந்துள்ளது. தற்போது 31.03.2023 அன்று பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் பாதாள சாக்கடைத் திட்டப்பணியும் 90% பணி முடியப்பெற்றுள்ளது.

விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இணைப்புச்சாலைக்காக 8.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நில எடுப்பு பணிக்காக அரசு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணியில் 15(1) முடிவுற்று 19(2) ன் படி அரசு நிர்ணயம் செய்த தொகை சம்மதமா என நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் ஆலோசனைக்கூட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டம் முடிந்ததும் நிலம் கையகப்படுத்தும் பணியும் விரைவில் தொடங்கி சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு விரைவில் இணைப்புச்சாலை பணியும் தொடங்கும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகரசேர்மன் பவித்ராஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் கழக நிர்வாகிகள், நகராட்சி ஆணையர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Sathur Ramachandran ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் ரூ.13 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்